கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பிள்ளையான் விளக்கமறியலில்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (02) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கடந்த 2025 ஏப்ரல் 08ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட அவர், சுமார் 359 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நான்கு முறை தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டிருந்த நிலையில், இறுதி உத்தரவு நாளை (03) நிறைவடையவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

உபவேந்தர் காணாமல் போன சம்பவம் மட்டுமன்றி, பிரிட்டனின் ‘செனல்-4’ (Channel 4) தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த ஒரு வருடமாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

பிள்ளையானின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்த அசாத் மௌலானா முன்வைத்த வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்த குழுவினருக்கும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையில் சந்திப்புகளை ஒருங்கிணைக்க பிள்ளையான் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையிலிருந்தார். இருப்பினும், 2021ஆம் ஆண்டு சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.