உலகில் எந்த நாட்டிலும் இல்லாத சதவீதத்தில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு: முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த கடும் விமர்சனம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

​கடந்த 21ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பானது, நவீன வரலாற்றில் ஒரு அரசாங்கம் மேற்கொண்ட மிக மோசமான தந்திரோபாயம் எனவும், இது ஒரு ‘கறுப்புச்சந்தை முதலாளித்துவ’ பாணியிலான நடவடிக்கை எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

​அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் அரசாங்கங்கள் செயற்பட்ட முறையோடு ஒப்பிடுகையில், ‘மக்களை மகிழ்ச்சியாக வாழ வைப்போம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பாரிய முரண்பாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே முந்தைய ஆட்சியை மாற்றி இந்த அரசாங்கத்தை தெரிவு செய்த போதிலும், இன்று அரசாங்கத்திற்கு ஏற்படும் அனைத்து அழுத்தங்களும் நேரடியாக மக்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

போர்ச் சூழல்கள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளின் போது கூட இவ்வாறான அழுத்தங்கள் மக்கள் மீது திணிக்கப்படவில்லை என்றும், இன்று அரசாங்கம் எவ்வித சுமைகளையும் தாங்காமல் சுதந்திரமாக இருப்பதாகவும், ஆனால் சாதாரண மக்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
​தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, உலக சந்தையில் விலை உயரும் போது விலையை உயர்த்துவதற்கு எதற்கு ஒரு அமைச்சர் அல்லது ஜனாதிபதி தேவை என்றும், அதனை ஒரு சாதாரண வட்டிக்கு பணம் கொடுப்பவர் கூட செய்ய முடியும் என்றும் கூறியதை இந்திக அனுருத்த நினைவு கூர்ந்தார். ஆனால் இன்று அதே ஜனாதிபதி ஒரு கறுப்புச்சந்தை முதலாளியைப் போல செயற்படுவதாகவும், எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து மின்சாரக் கட்டணம் மற்றும் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதால் மக்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் உள்ளவர்கள் சுகபோகங்களை அனுபவிக்கும் வேளையில், சாதாரண மக்கள் ஒரு வேளை உணவிற்காக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்கள் எவ்வாறு உயிர்வாழ்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
​தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தைச் சந்தித்த போதிலும், அந்த நஷ்டத்தை மக்கள் மீது சுமத்தாமல் திறைசேரியின் ஊடாக அரசாங்கமே பொறுப்பேற்றதாக அவர் குறிப்பிட்டார். VAT வரி குறைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான சலுகைகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியம் போன்றவற்றின் மூலம் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்ததாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அடிபணிந்து செயற்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

இறுதியாக, அரசாங்கத்திற்கு ஏற்படும் சுமைகளை மக்களிடம் தள்ளாமல், ஒரு தற்காலிக காலத்திற்காவது அரசாங்கமே அதனைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும், தாம் தற்போதைய அரசாங்கத்தைப் போல வேலைநிறுத்தங்கள் அல்லது போராட்டங்களை முன்னெடுத்து அரசாங்கத்தின் காலை வாரப்போவதில்லை என்றும், ஆனால் கள்ளச்சந்தை தந்திரோபாயங்களை கைவிட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.