“சட்டம் சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கு இரையாகிறது” – முன்னாள் எம்.பி சஞ்சீவ எதிரிமான்ன குற்றச்சாட்டு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சட்டம் என்பது ஆசைகளினால் பாதிக்கப்படாத தூய பகுத்தறிவு என வரையறுக்கப்பட்டாலும், இலங்கையில் தற்போது அது சில புலனாய்வாளர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (20) பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், விசாரணை அதிகாரிகள் தங்களது அரசியல் அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதற்காக சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
இதன்போது கபில சந்திரசேன என்பவரால் வழங்கப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய சத்தியக்கடதாசி ஒன்றினை அவர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார். அந்தச் சத்தியக்கடதாசியின் 6-வது சரத்தின்படி, விசாரணை அதிகாரி ஒருவர் அச்சுறுத்தும் தொனியில் தன்னிடம் பேசியதாக கபில சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

“இது உனது கடைசி வாய்ப்பு, இதற்கு முன்னர் ஒருவருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கினேன், அவர் அதனைப் பயன்படுத்தாததால் தற்கொலை செய்துகொண்டார். நீயும் அவ்வாறு ஆக விரும்பவில்லை என்றால், மகிந்த மற்றும் நாமலின் பெயர்களைக் கூறு” என அந்த அதிகாரி தன்னை மிரட்டியதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்படும் இத்தகைய வாக்குமூலங்களுக்கு முறையான சட்ட வலிமை இல்லை என்றாலும், ஒருவரது தனிப்பட்ட விருப்பங்களை சட்டத்துடன் கலக்கும் இத்தகைய செயற்பாடுகள் பாரதூரமானவை என சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தச் சத்தியக்கடதாசியில் கூறப்பட்டுள்ளவாறு, இதற்கு முன்னர் விசாரணையின் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்குப் பணிந்து வாக்குமூலம் அளிப்பதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்ற இரு தெரிவுகளையே விசாரணை அதிகாரிகள் சாட்சிகளுக்கு வழங்குகின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதனை ஒரு அரசியல் கட்சியின் நோக்கமாக மட்டும் பார்க்காமல், சமூக நீதிக்கான ஒரு போராட்டமாக அனைவரும் கருத வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இன்று மற்றவர்களுக்கு நடக்கும் இந்த அநீதி நாளை சாதாரண மக்களுக்கும் ஏற்படலாம் என்பதால், சட்டத்தின் ஆட்சியையும் நீதியையும் நிலைநாட்ட இத்தகைய முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவது அவசியம் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.