ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் விலை உண்டு: ஈரான் புதிய உச்சத் தலைவரின் அதிரடி
Meiveli Media Team

ஈரானின் முக்கிய பாதுகாப்புப் படைத் தலைவரான அலி லாரிஜானி படுகொலை செய்யப்பட்டதை அந்தநாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்திய நிலையில், ஈரானின் புதிய உயரிய தலைவர் மொஜ்தபா கமேனி இது குறித்து முதல்முறையாக பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். லாரிஜானியின் மரணம் குறித்து குறிப்பிட்டுள்ள மொஜ்தபா கமேனி, ‘லாரிஜானி ஒரு அறிவார்ந்த, அர்ப்பணிப்புள்ள ஆளுமை. அவரது மறைவுச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பெற்றுக்கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார். லாரிஜானியின் படுகொலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ‘இத்தகையதொரு முக்கியத் தலைவரின் படுகொலை, அவர் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதையும், எதிரிகள் அவர் மீது கொண்டுள்ள வெறுப்பையுமே காட்டுகிறது.
இஸ்லாமிய அமைப்பின் அடிவாரத்தில் சிந்தப்படும் இத்தகைய இரத்தம், அந்த மரத்தை மேலும் வலுப்படுத்துமே தவிர வீழ்த்தாது’ ‘சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு. இந்தத் தியாகிகளை வீழ்த்திய அந்த கொலையாளிகள் அதற்கான விலையை விரைவில் செலுத்தியே தீர வேண்டும்’ என மொஜ்தபா கமேனி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். அலி லாரிஜானி ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் நீண்டகாலமாகப் பங்காற்றியவராவார். அவரது படுகொலை தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ப்பதற்றத்தை மேலும் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

