உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி வெளிப்பத்துவோம்: உதய கம்மன்பில தெரிவிப்பு

Meiveli Media Team

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த 07 வருடங்களாக வியாபாரம் செய்யப்பட்டது. இதனைக்கொண்டு அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன, அரசாங்கங்கள் கலைக்கப்பட்டன. எந்தவொரு அடிப்படையும் இன்றி இராணுவத்தினரை துன்புறுத்த இந்தத் தாக்குதல் பயன்படுத்தப்பட்டது. இப்போது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வந்துவிட்டது. அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை நாம் வெளிக்கொணருவோம். சுமார் ஒன்றரை வருட காலம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ‘உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி’ எனும் ஆய்வு நூலை தயாரித்துள்ளோம். ஆகவே அதனை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி மாலை 3:30 க்கு வெளியிட எதிர்பார்த்துள்ளோம்’ என்றார்.