மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தோல்வி; சஜித் பிரேமதாசவின் தூரநோக்கான செயற்பாடுகளை விளக்குகிறார் விஜயபால ஹெட்டியாராச்சி

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான காரியாலயத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளின்படி மக்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறிவிட்டதாகக் குற்றம் சுமத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மக்களின் பிரச்சினைகளுக்குக் கடுகதியில் தீர்வுகளை வழங்குவதாகத் தேர்தல்காலங்களில் தொடர்ச்சியாகக் கூறிவந்த போதிலும், அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்திற்குத் தூரநோக்குடன் சிந்தித்து தீர்மானங்களை எடுக்கும் சக்தி இல்லை எனத் தெரிவித்த அவர், நாட்டில் ஏதேனும் பேரழிவுகளோ அல்லது நெருக்கடிகளோ ஏற்படும்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எப்போதும் சரியான முறையில் தலையீடு செய்து வந்துள்ளார் என்றார். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் ஒருபோதும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு விடயத்தையும் செய்வதற்கு முன்னர் எமக்கு ஒரு ஜனநாயக நாடு இருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தை முகங்கொடுக்கக்கூடிய சிறந்த சூழலை நாட்டிற்குள் உருவாக்கச் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாகக் கொவிட் தொற்று பரவுவதற்கு முன்னரே அது குறித்து நாட்டுக்கு வெளிப்படுத்தியவர் சஜித் பிரேமதாச எனக் குறிப்பிட்ட ஹெட்டியாராச்சி, தடுப்பூசிகளை உடனடியாகக் கொண்டுவந்து நாட்டு மக்களைப் பாதுகாக்குமாறு அப்போதைய அரசாங்கத்தை முதலில் கேட்டுக்கொண்டவரும் அவரே என்றார். வைத்தியசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததோடு, தமது கட்சி சார்பாகவும் சத்திரசிகிச்சை உபகரணங்களை வைத்தியசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதேபோல், அண்மையில் இலங்கையைப் பாதித்த ‘தித்வா’ சூறாவளி சந்தர்ப்பத்திலும், உடனடியாக இடர் மேலாண்மைச் சட்டத்தைப் பலப்படுத்துமாறு சஜித் பிரேமதாச உள்ளிட்ட தமது கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குமாறும், அதற்கான முறையான மேலாண்மையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். எனினும், எதிர்க்கட்சியின் ஆலோசனைகள் தேவையில்லை என அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டதன் விளைவாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முறையான நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்பதுடன், அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் கிடைத்த உதவிகளைக் கூடச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியாமல் போயுள்ளதாக அவர் சாடினார்.

மத்திய கிழக்கு போர் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை என்றாலும், சஜித் பிரேமதாச சர்வதேச ஊடகங்களுடனான நேர்காணல்களில் தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைத்துள்ளதாக ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். போரின் கொடூரமான தன்மையையும் பயங்கரவாதச் செயற்பாடுகளையும் தாம் கண்டிப்பதாகவும், அதேவேளை எந்தவொரு தரப்புக்கும் பக்கச்சார்பாகச் செயற்படப் போவதில்லை என்றும் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தியுள்ளார். அண்டை நாடான இந்தியாவுடன் சுமுகமாகச் செயற்பட்டு, பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையின் தனித்துவத்தைப் பாதுகாப்பதே தமது கொள்கை என அவர் சர்வதேச ரீதியாக எடுத்துரைத்துள்ளார். சஜித் பிரேமதாச ஒருபோதும் சர்வதேசத்திற்கு முன்னால் நாட்டை அசௌகரியத்திற்கு உள்ளாக்கவில்லை எனவும், மாறாக இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது குறித்தே அவர் சிந்திப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்யும்போது அரசியல் பேதங்களை விடுத்து, அகங்காரத்தைக் கைவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களை ஏளனம் செய்யாமல் அரசாங்கம் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அவ்வாறு இல்லாவிட்டால் வருங்காலத்தில் அரசாங்கம் பாரிய பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் எனவும், சர்வதேச ரீதியான கொடுக்கல் வாங்கல்களின் போது அரசாங்கம் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் எச்சரிக்கை விடுத்தார்.