அமைச்சர் விஜித ஹேரத் சர்வதேச ரீதியில் இலங்கையை வேடிக்கைப் பொருளாக்கியுள்ளார்: சாகர காரியவசம் கடும் விமர்சனம்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

ஆங்கில மொழி பேசத் தெரியாதது ஒரு வெட்கத்திற்குரிய விடயமல்ல என்றாலும், ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சர் என்பவர் தனிப்பட்ட ஒருவரை அல்லாது, முழு நாட்டையுமே சர்வதேச ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்லயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.03.09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளிக்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அமைச்சரவை பதவியேற்ற நாளன்று திருடப்பட்ட 14 கடவுச்சீட்டுகள் தொடர்பான விசாரணை முதல், 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாரிய மோசடி வரை பல ஊழல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகக் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக அரிசி இறக்குமதி, எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்வனவுகளில் இடம்பெற்ற ஊழல்கள் இன்று நாட்டு மக்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், வடக்கிற்குச் செல்லும் சிங்கள பௌத்தர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் பொருளாதாரத்தையும் கலாசாரத்தையும் அழிப்பது மட்டுமன்றி, சர்வதேச ரீதியிலும் இலங்கையை இந்த அரசாங்கம் வேடிக்கைப் பொருளாக்கி வருவதாக அவர் சாடினார். சீன அதிபர் போன்ற உலகத் தலைவர்கள் தமது தாய்மொழியில் பேசி மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துவது கௌரவமான விடயம் என்றும், ஆனால் ஆங்கிலம் தெரியாததைக் காட்டிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பை உணராதிருப்பதே வேதனையானது என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, சர்வதேச மகளிர் தின நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், தான் பதவியில் இருக்கும் நாட்டின் பெயரைக் கூட சரியாகக் குறிப்பிடத் தவறியமை ஒரு கவலையான நிலை எனச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், அரசியலமைப்பின் முதலாவது சரத்தைப் படித்துப் பார்த்து ‘இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு’ என்ற நாட்டின் பெயரைச் சரியாக உச்சரிக்குமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, ஐசக் நியூட்டனின் மூன்றாவது விதியை மேற்கோள் காட்டிய அவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பேசும் ஒவ்வொரு கருத்துக்கும் நேர் எதிரான கருத்துக்களை அவரே கடந்த காலத்தில் பேசியிருப்பதாகக் கூறி, நியூட்டனின் விதி இன்று அரசியலுக்கும் பொருந்துகிறது எனத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.