நிலக்கரி மோசடியினால் ஏழை மக்கள் பாதிப்பு: திலித் ஜயவீர கடும் சாடல்

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

இலங்கை வரலாற்றில் இதுவரை உருவான அரசாங்கங்களில் மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியாக தற்போதைய அரசாங்கம் விளங்குவதாக சர்வஜன அதிகாரம் அமைப்பின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மோசடிக்காரர்களான வியாபாரிகளை போஷித்து வருவதாகவும், மிகவும் உணர்வற்ற முறையில் அவர்களைப் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெறாத அளவிலான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும், இது குறித்து தாம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கல்களைப் பாதுகாப்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளதோடு, அது அவர்களின் டி.என்.ஏ (DNA) விலேயே ஊறியுள்ளதாக அவர் கடுமையாக விமர்சித்தார். “ஏழை எளிய மக்கள்” பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், தற்பொழுது அதற்கு நேர்மாறான ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, நாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய நிலக்கரி மோசடியின் விளைவாக, எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டின் மிகவும் ஏழ்மையான மனிதனும் அதன் பாதிப்பை அனுபவிக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

குறைந்த வருமானம் பெறும் மற்றும் வறிய நிலையில் உள்ள மக்கள், இந்த மோசடியின் காரணமாக மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல வழிகளில் பாரிய பொருளாதாரச் சுமையை சுமக்க வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கிராமங்களில் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் அப்பாவி மக்கள் மீது இத்தகைய ஊழல்வாதிகள் இரக்கமற்ற முறையில் செயற்படுவது குறித்து தாம் ஆச்சரியமடைவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.