பொய்களால் மக்களை ஏமாற்றி மீண்டும் வரிசையுகத்தை உருவாக்கியுள்ளது அரசாங்கம் – குமாரி பதிரகே காட்டம்
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் மகளிர் முன்னணித் தலைவி குமாரி பதிரகே, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம்’ எனக் கூறி வாக்குறுதிகளை வழங்கியவர்கள், இன்று எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகவும், வரிகளைக் குறைப்பதாகவும் உறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
குறிப்பாக, மின்சாரக் கட்டணத்தை 30% இனால் குறைக்க முடியும் என்றும், மருத்துவமனைகளின் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் மக்களுக்குப் பெரும் எதிர்பார்ப்புகளை வழங்கினார்கள். இவ்வாறான கமிஷன்களும், பொய்களும் நிறைந்த ஓர் அரசாங்கத்தை நாங்கள் இதற்கு முன்னர் கண்டதே இல்லை என அவர் தெரிவித்தார்.
தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு குறித்து அமைச்சர்களுக்கிடையே முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன.
அமைச்சர் சாமர சம்பத் இன்னும் மூன்று மாதங்களில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கூறும் நிலையில், அதனை மறுத்துப் பேசிய விஜித ஹேரத் வரிசைகள் ஏற்படாது என உறுதியளித்திருந்தார். இருப்பினும், இன்று வீதிக்கு இறங்கிப் பார்த்தால் உண்மை நிலைமை புரியும் என்றும், எமது நாட்டின் பெண்கள் மீண்டும் எரிவாயுவிற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
மேலும், நாட்டின் கடந்த கால கொடூர யுத்த அனுபவங்கள் குறித்துப் பேசிய அவர், “எங்களிடம் கேட்டுத்தானா யுத்தம் செய்தீர்கள்?” என நாட்டின் இரண்டாம் பிரஜையான பிரதமர் கூறுவது மிகவும் வருந்தத்தக்கது என்றார். நாட்டின் பெண் பிரதமர் ஒருவர் எந்தவிதமான உணர்வுகளும் இன்றி, இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களைத் தெரிவிப்பது பெரும் வேதனையை அளிப்பதாகவும் குமாரி பதிரகே இதன்போது மேலும் தெரிவித்தார்.

