ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கில் வெறுப்பை விதைக்கின்றனர் – நிரோஷன் பாதுக்க

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஊழல் எதிர்ப்புப் படையணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் வடக்குக்குச் சென்று இனங்களுக்கிடையில் வெறுப்பை விதைப்பதன் மூலம் நாட்டை மீண்டும் எரிக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

தெற்கில் உள்ள மக்கள் வடக்குக்கு வருவது வெறுப்பை விதைக்கவே என்று ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் அண்மையில் தெரிவித்த கருத்தையும், யுத்தம் செய்வதற்கு முன்னால் மக்களிடம் கேட்டிருக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்த கருத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

பயங்கரவாதிகள் தலதா மாளிகை மற்றும் மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியபோதும், அரந்தலாவையில் பிக்குகளைப் படுகொலை செய்தபோதும் பிரதமரிடம் அனுமதி கேட்டார்களா என கேள்வி எழுப்பிய பாதுக்க, கடந்தகால நிகழ்வுகள் குறித்து எந்தவித புரிதலும் இன்றி அரசாங்கம் செயற்படுவதாகவும், வடக்கு – தெற்கு மக்களை இணைக்கும் பாலத்தை அமைப்பதற்குப் பதிலாக அவர்களைப் பிரிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மக்களின் துயரங்கள் குறித்து அரசாங்கத்திற்கு எவ்வித உணர்திறனும் இல்லை எனவும் அவர் சாடினார். ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கு மற்றும் தெற்கு மக்களை விளித்துப் பேசும்போது நாட்டுத் தலைவர்கள் என்ற ரீதியில் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் எனவும், வடக்குக்கு அன்பைக் கொண்டு செல்ல வேண்டுமே தவிர வெறுப்பைக் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

17 ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், எந்தவொரு அரசியல் தலைவரும் இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களைக் கூறியதில்லை எனவும், பிரதமரின் அரசியல் முதிர்ச்சியின்மையை அவரது கருத்துக்கள் வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் புதிய மத மற்றும் சமூக வெறுப்பை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்த பாதுக்க, அரசாங்கத்தின் அமைச்சர்கள் மகா சங்கத்தினரை அவமதிப்பதன் மூலமும் அச்சுறுத்துவதன் மூலமும் மதச்சார்பற்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் நடைபெறும் ‘மகா சங்க மாநாடு’ என்பது கடந்த காலங்களில் சங்கத்தினர் மத்தியில் தேங்கியிருந்த அழுத்தத்தின் வெளிப்பாடாகும் எனவும், பௌத்த சாசனத்தை அழிவை நோக்கிக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் முயற்சியை மகா சங்கத்தினர் புரிந்துகொண்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். அரசியலமைப்பின் படி அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதை அவர் நினைவுபடுத்தினார்.

இறுதியாக, அரசாங்கத்தின் மீதான மக்கள் ஆதரவு 65% ஆக உள்ளதாக ‘வெரிட்டே ரிசர்ச்’ நிறுவனம் நடத்திய ஆய்வு உண்மையானது என்றால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பாதுக்க சவால் விடுத்தார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும் தேர்தல் முறையைத் திருத்தவோ அல்லது கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவோ முடியாமல் இருப்பது அரசாங்கத்தின் அனுபவமின்மையைக் காட்டுகிறது என்றார். விருப்பு வாக்கு முறையிலோ அல்லது வேறு எந்த முறையிலோ மாகாண சபைத் தேர்தலை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும், அரசாங்கம் விதைக்கும் வெறுப்புக்கு மக்கள் வழங்கும் பதிலை அந்தத் தேர்தலில் காண முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.