நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் விசேட கேள்வி
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தற்போதைய நடவடிக்கைகள் என்னவென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்த அவர், பிரபல நபர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அரச பாதுகாப்பு பொறிமுறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சூழலில் வலுவான பொலிஸ் சேவையின் அவசியம் முன்னுரிமை பெற்றுள்ளதால், பொலிஸ் துறையில் தற்போது நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவை எவ்வளவு காலமாக நிலவுகின்றன என்பது குறித்த விபரங்களை அரசாங்கம் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த தசாப்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடுகள், படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கையை ஆண்டு அடிப்படையில் தெரிவிக்குமாறு கோரிய எதிர்க்கட்சித் தலைவர், அத்தகைய சம்பவங்களில் சந்தேகநபர்களைக் கைது செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் விசாரணை நிறைவடையாத சம்பவங்கள் குறித்து தனித்தனியாக விளக்கமளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சர்வதேச தரநிலைப்படி 1,000 பேருக்கு 2.2 பொலிஸ் அதிகாரிகள் என்ற விகிதம் பேணப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்ட அவர், தற்போதைய பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானது என்று அரசாங்கம் கருதுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச குற்றவியல் வலையமைப்புகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள விசேட நடவடிக்கைகள் யாவை என்பது குறித்தும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு நீண்டகாலமாக விசாரணை நிறைவடையாமல் உள்ள அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீதான அரசியல் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அவர் வினவினார்.
அத்தகைய விசேட விசாரணைக் குழுக்கள் எவை? அவை எந்த நபர்கள் தொடர்பாக இயங்குகின்றன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இறுதியாக, நாட்டில் நிலவும் இந்த அச்சமான சூழலை மாற்றியமைத்து, கொலை அலையைத் தடுப்பதற்குப் புதியதொரு பாதுகாப்புத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு மேலும் வலியுறுத்தினார்.

