அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக பாட்டலி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்தின் அதூர்தரிசனமான மற்றும் ஊழல் நிறைந்த செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் வகையில், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (18) லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குச் சென்று முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார்.

நிலக்கரி இறக்குமதிக்கான கொள்முதல் செயல்பாட்டில் இடம்பெற்றுள்ள பாரிய முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து இன்று நாடே அறிந்துள்ள நிலையில், இலங்கை மின்சார சபை அண்மையில் சமர்ப்பித்த அறிக்கைகள் மூலம் அந்த உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் (4 கப்பல்கள் மூலம் மட்டும்) நாட்டுக்கு 1759 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளமையை முறையான தரவுகளுடன் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது வெளிப்படுத்தினார்.

மேலும், தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்குரிய 25 நிலக்கரிக் கப்பல்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ள நிலையில், தற்போதைய நடைமுறை தொடர்ந்தால் நாட்டுக்கு சுமார் 1099 கோடி ரூபாய் வரை மேலதிக நஷ்டம் (தண்டப் பணத்தை கழித்த பின்னர்) ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில், வரும் 2026 ஏப்ரல் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 13.5 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த நிலக்கரி மோசடி மூலம் நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட நஷ்டத்தை பொதுமக்கள் மீது சுமத்துவதே இந்த கட்டண உயர்வின் உண்மையான நோக்கம் என அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், நாட்டின் 75 இலட்சம் மின் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த முறைப்பாட்டைத் தாம் தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

