நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை வென்றெடுக்க புதிய இறங்குதுறை நிர்மாணம்: 318 மில்லியன் ரூபா பாரிய முதலீடு

ச. ஞான‌ பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

-“கர்தினால் ஆண்டகையின் கோரிக்கையை நிறைவேற்றி நீர்கொழும்பு களப்பைப் பாதுகாக்கிறோம்; கலைஞர்களின் சொர்க்கபூமியை மீண்டும் சுற்றுலாத் தலமாக மாற்றுகிறோம்” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

-“டின் மீன் இறக்குமதியை 97.5% ஆக குறைத்து, ஏற்றுமதி வருமானத்தை 300 மில்லியன் டாலர்களால் உயர்த்தியுள்ளோம்; கடற்றொழில் துறை தற்போது சரியான திசையில் பயணிக்கிறது” – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

கடற்றொழில் துறைக்கும் சுற்றுலாத் துறைக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நீர்கொழும்பு களப்பைப் (Lagoon) பாதுகாக்கவும் அதன் இயற்கை அழகை மேம்படுத்தவும், 318.49 மில்லியன் ரூபா செலவில் புதிய இறங்குதுறை (Jetty) மற்றும் படகு ஏவுதளம் (Boat Launching Pad) ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் இன்று (17) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக நினைவு கூர்ந்தார். “நீர்கொழும்பு களப்பு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு கருப்பொருளாக அமைந்த ஒரு அழகான இடமாகும். ஆனால் முறையற்ற விதத்தில் படகுகள் நிறுத்தப்படுவதால் அதன் அழகு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இறங்குதுறை நிர்மாணிக்கப்படுவதன் மூலம் படகுகளை முறையாக நிறுத்திவைக்க சந்தர்ப்பம் கிடைக்கும். இது மீனவர்களுக்கும் சுற்றுலாத் துறைக்கும் பெரும் உதவியாக அமையும்,” என அமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, தானும் அமைச்சரவையும் மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும், அமைச்சர்களின் வரப்பிரசாதங்களைக் குறைத்து அந்தப் பணத்தை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் ரத்ன கமகே குறிப்பிடுகையில், நீர்கொழும்பு களப்பு நீண்ட காலமாக சூழல் மாசடைதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார். “தொழிற்சாலைக் கழிவுகள், இரசாயனப் பொருட்கள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் களப்பு அழிவடைந்து வருகிறது. இந்நிலையைக் கட்டுப்படுத்த களப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஒன்றை ஸ்தாபிக்கும் யோசனையை நாம் முன்னர் முன்வைத்தோம்.” என அவர் கூறினார்.

அரசாங்கத்தின் சரியான பொருளாதார முகாமைத்துவம் காரணமாக 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் மீன் மற்றும் மீன் சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதியை 13% ஆகவும், டின் மீன் (Canned Fish) இறக்குமதியை 97.5% ஆகவும் குறைத்துக்கொள்ள முடிந்ததாகப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் கடற்றொழில் ஏற்றுமதி வருமானம் 300 மில்லியன் டாலர்களால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டம் 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பெர்னாண்டோ, நீர்கொழும்பு மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹீன்கெந்த, பிரதேச செயலாளர் ரசிக்கா மல்லவஆராச்சி, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.