அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட செயல் – இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை

Meiveli Media Team

 

அகமதாபாத் விமான விபத்தில் எரிபொருள் சுவிட்சை விமானி வேண்டுமென்றே அணைத்துவிட்டதாக இத்தாலிய செய்தித்தாள் கொரியர் டெல்லா செரா தெரிவித்துள்ளது. இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என தெரிவித்து வெளியாகியுள்ள செய்திக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்திலிருந்து கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் திகதி லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். விமானத்தில் பயணித்தவர்களைத் தவிர அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் என மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, புலனாய்வுப் பணியகம்  விசாரணை நடத்தி, முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில்,இரண்டு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், 1 வினாடி இடைவெளியில், உயரத்தில், ஒன்றன்பின் ஒன்றாக கட்ஆஃப் நிலைக்கு நகர்த்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இரண்டு விமானிகள் பேசிய விமானத்தின் காக்பிட்டில் இருந்த குரல் பதிவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பலதரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதாவது, இந்த விபத்துக்குக் காரணமாக விமானி இருந்திருக்கலாம் எனக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்கு விமான வல்லுநர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மத்திய அரசும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது. இந்த நிலையில், ‘அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என்று இத்தாலிய நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது