சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிரான வாக்கெடுப்பு: திகதி குறிக்கப்பட்டது

Meiveli Media Team

சுவிட்சர்லாந்தில்  புலம்பெயர்தலுக்கு எதிராக பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது  என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது. அதாவது, புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்மூலம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது. புலம்பெயர்ந்தோரால் வீடுகள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுவிஸ் மக்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி இந்த பிரேரணையை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ளது. ஒரு பக்கம் சுவிஸ் மக்கள் கட்சி புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்மூலம் சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என கோரி வரும் நிலையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக, பல தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். ஏற்கனவே, சுவிஸ் நாடாளுமன்றம், சுவிஸ் மக்கள் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயன்றால் சுவிட்சர்லாந்து பெரும் விலை கொடுக்க நேரிடும் என சமீபத்திய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.