எப்ஸ்டீனுக்கு அளித்த ஆவணம்… அரசாங்கத்தின் முடிவை அடுத்து சிக்கலில் பிரெஞ்சு தூதர்
Meiveli Media Team

ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களை ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு கைமாற்றியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பிரெஞ்சு தூதர், தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் இந்த வாரம் சட்டத்துறையை எச்சரித்ததாகவும், ஐடனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு பிரான்சின் வெளிவிவகார அமைச்சகத்தில் சேர்ந்த தொழில்முறை தூதரான ஃபேப்ரிஸ் ஐடன், அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட ஆவணங்களில் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பாக 200 க்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளார்.
பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து பணி நியமனம் பெற்று, ஜூலை 2006 முதல் ஏப்ரல் 2013 வரை ஐ.நா.வில் பணியாற்றியுள்ள ஐடன், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மட்டுமின்றி, பிரெஞ்சு நீதித்துறையின் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக உள்ளதாகவும் தமது சட்டத்தணி மூலமாக அறிவித்துள்ளார். வெளியான தரவுகளில், ஐடன் தனது தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ ஐ.நா. கணக்கிலிருந்து அனுப்பிய கடிதத்தில்இ 2010 மற்றும் 2016 க்கு இடையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விளக்கங்கள் மற்றும் பிற ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு கைமாற்றப்பட்டதைக் காட்டுகிறது. இந்த நிலையில், பிரெஞ்சு புலனாய்வு வலைத்தளமான மீடியாபார்ட் புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், 2013 ஆம் ஆண்டில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக வலைத்தளங்களைப் பார்த்ததாகக் கூறி எப்பிஐ ஐடனைக் கண்டித்துள்ளது. ஆனால், அதே ஆண்டு ஐடன் தனது ஐ.நா. பதவியை ராஜினாமா செய்தார் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். மேலும், உறுப்பு நாடு பகிர்ந்து கொண்ட தகவல்களின் அடிப்படையில் ஐடனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக டுஜாரிக் கூறியுள்ளார்.

