பௌத்த புனித சின்னங்கள் மீண்டும் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன், பிரதமர் மோடியின் தூதுக் குழுவை அமைச்சர் விஜித சந்தித்தார்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் நடைபெற்ற தேவ்நிமோரி புனித பௌத்த சின்னங்கள் காட்சிப்படுத்தும் புண்ணிய மகோற்சவம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த சின்னங்களை மீண்டும் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லும் பொருட்டு இலங்கைக்கு வந்த இந்திய பிரதிநிதிகள் குழுவை அமைச்சர் விஜித சந்தித்தார்.

இந்த சந்திப்பில், மத்திய பிரதேச மாநில ஆளுநர் கௌரவ மங்குபாய் சாகன்பாய் பட்டேல் (Hon. Mangubhai Chhaganbhai Patel) மற்றும் அருணாச்சல பிரதேச மாநில துணை முதல்வர் கௌரவ சௌனா மேயின் (Hon. Chowna Mein) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏழு நாட்கள் காலப்பகுதியில் தேவ்நிமோரி புனித சர்வஞ ஞாதுக்கள் இலங்கையில் வைக்கப்பட்டமை, இலங்கை நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும் என அமைச்சர் விஜித தெரிவித்தார். இதன் மூலம் இலங்கை மக்களுக்கு அந்த புனித சின்னங்களை வழிபட்டு வணங்கும் அரிய வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்படுத்தல் நிகழ்வை வெற்றிகரமாக ஒழுங்குபடுத்துவதற்கு இந்திய அரசு வழங்கிய நெருங்கிய ஒத்துழைப்பிற்காக தனது மனப்பூர்வமான நன்றியையும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு நிகழ்வு, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நாகரிக உறவுகளையும், நெருங்கிய கலாசார மற்றும் மதப் பிணைப்புகளையும் தெளிவாக பிரதிபலிக்கின்றது. மேலும், கௌதம புத்தபகவானின் போதனைகளால் ஊக்கமளிக்கப்பட்ட, இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் பௌத்த மரபுரிமை அடிப்படையிலான ஆழமான ஆன்மிகத் தொடர்புகளை இது மேலும் வலுப்படுத்துகிறது.

இதன் மூலம், இலங்கை மற்றும் இந்திய மக்களுக்கிடையிலான நட்புறவும் பரஸ்பர புரிதலும் எதிர்காலத்தில் மேலும் உறுதியடையும் எனவும் அமைச்சர் விஜித சுட்டிக்காட்டினார்.