தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரம் மெல்ல மெல்ல நழுவுகிறது: முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் படிப்படியாகக் கைநழுவி வருவதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏழை மக்களிடமிருந்து வந்த ஒரு தலைவர் என்று மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது வேகமாகச் சிதைந்து வருவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் பிடி தளர்ந்து வருவதை ஜனாதிபதியும் அமைச்சரவையும் தற்போது உணர்ந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடாகவே கடந்த வாரத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் தரப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவையும் இலக்கு வைத்து வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தல்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த இடதுசாரி சக்திகள், இன்று மீண்டும் நாமல் ராஜபக்ஷவைச் சுற்றி அணிதிரள்வதைக் கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஹெலிகொப்டர் பயன்பாடு, நாடாளுமன்ற உணவு மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்கள் குறித்து கடந்த காலத்தில் மக்களிடையே பெரும் வெறுப்பைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று அதே சலுகைகளைத் தாமும் அனுபவித்து மக்களை ஏமாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, 323 கொள்கலன்கள் காணாமல் போன சம்பவம் மற்றும் நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பதாகவும், ஊழலுக்கு எதிரான கோஷங்கள் இனி இலங்கைக்குத் தேவையில்லை எனக் கூறுவது வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உணவு, மருந்து மற்றும் கல்வி உபகரணங்களுக்கு வரி விதிக்க மாட்டோம் என்று மேடைகளில் வாக்குறுதி அளித்த ஜனாதிபதி, இன்று சகல பொருட்களுக்கும் வரி விதித்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாகவும், ஜனாதிபதியின் செயற்பாடுகள் இந்நாட்டு மக்களை விடவும் வெளிநாட்டு சக்திகளையும் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் சாடினார். அத்துடன், பௌத்த மதகுருமார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சுதந்திர தின நிகழ்வில் இராணுவத்தினரை அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திய சம்பத் அத்துகோரள, மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் உதவி செய்வதாகக் கூறிய ஜனாதிபதிக்கு, தனது செயலகத்தின் முன் போராடும் மீனவர்களைச் சந்தித்துப் பேசக் கூடத் துணிவில்லை எனவும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.