இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு: கொழும்பில் கோலாகலமாக நடைபெற்ற ‘பாட்டு பாடவா’ பக்திப் பாடல் போட்டி
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இலங்கையில் ஐயப்ப வழிபாடு ஆரம்பிக்கப்பட்டதன் 50-வது ஆண்டு பொன்விழாவினை முன்னிட்டும், இலங்கையிலிருந்து முதன்முதலில் சபரிமலை யாத்திரையை ஆரம்பித்த மறைந்த ஆதிகுரு க. ரவீந்திர குமார் குருசாமி அவர்களை நினைவு கூரும் வகையிலும் “பாட்டு பாடவா” பக்திப் பாடல் போட்டி நேற்றைய தினம் (08/02/2026) கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஸ்ரீ கல்யாண முருகன் மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் தலைவர் எஸ். விஜேராஜ் இன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் இறுதிச் சுற்றுப் போட்டியில் எட்டு போட்டியாளர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலாம் இடத்தினை ஹட்டனைச் சேர்ந்த தினுஷிகா பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடத்தினை வத்தளையைச் சேர்ந்த கவி பிரசாந்த் மற்றும் மூன்றாம் இடத்தினை கொட்டகலையைச் சேர்ந்த குமார் தனுஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, ஏனைய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட விசேட போட்டியில் வெற்றி பெற்ற மூன்று சிறுவர்களுக்கும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கொழும்பு கலாசார அதிகார சபையின் தலைவர் சிந்திக்க பத்திரன, முன்னாள் தலைவர் சந்தன விஜேமான்ன, முன்னாள் செயலாளர் திமித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், சிறப்பு அதிதிகளாக பந்தளராஜன் நற்பணி மன்ற யாத்திரை குழு மோகன் குருசாமி, ஷேடோ லைன் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. மகாலிங்கம், கொழும்பு 13 கதிரேசன் வீதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் விஜியானந்தன் குருசாமி, ஸ்ரீ சக்தி சபரி யாத்திரை குழு சிவசுப்பிரமணியம் குருசாமி, அவிசாவளை மகேஸ்வரன் குருசாமி, கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் அறங்காவலர் கனக ரகுநாதன் ஐயா, அட்டன் ரிஷி செந்தில் குருசாமி மற்றும் ராஜேந்திரன் குருசாமி உள்ளிட்ட பல ஆன்மீகப் பெரியோர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக கலை மற்றும் சமூகத் துறைகளில் பங்காற்றிய ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இதன்போது எமது கொழும்பு செய்தியாளர் – சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்திரகாசன் ஞான பிரசாந்தன் ஊடகத்தினூடாக கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக “ஊடகச் செம்மல்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.




