இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி கொழும்பு வளாகத்தினுள் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ வித்தக விநாயகர் திருக்கோவில், புனரமைக்கப்பட்டு அதன் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம்
விசுவாவசு வருஷம் தை மாதம் 24ம் நாள் (07.02.2026) சனிக்கிழமை, காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகிய யாகபூஜை விஷேட திரவ்ய ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து
காலை முதல் மாலை வரை பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தி தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்தும் கிரியை நிகழ்வுகளான ஆலய சுத்தி, பிம்ப சுத்தி ரஷாபந்தனம், பூர்வசந்தானம், யாகபூஜை ஹோமம், ஸ்பரிசாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, ஆச்சார்யபூஜனம் ஆகியவை நடைபெற்றது.

மேலும், நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) இந்த மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிரியாகால நிகழ்வுகள் காலை கணபதி ஹோமம் மற்றும் நவகிரஹ ஹோமத்துடன் ஆரம்பமாகி, மாலை வாஸ்து சாந்தி மற்றும் அங்குரார்ப்பணச் சடங்குகளோடு நடைபெற்றதோடு விசேட நிகழ்வாக

 
திருக்கயிலாய பரம்பரை, தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சந்நிதானம் ஜகத்குரு ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் விசேட வருகையும் அவர்தம் திருக்கரங்களால் கலச பூஜை மற்றும் ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மூலஸ்தான கலசம் வைக்கும் நிகழ்வும் சுவாமிகளின் அருளாசியுடன் இனிதே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாளைய தினம் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் தினமும் காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் 28-ஆம் திகதி சனிக்கிழமை அன்று மண்டலாபிஷேகப் பூர்த்தி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்தத் திருக்குடமுழுக்கு விழாவினை இந்துக் கல்லூரி கொழும்பின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதோடு, இந்த உன்னதமான ஆன்மீக நிகழ்வில் அனைத்து அடியார்களையும் கலந்துகொண்டு வித்தக விநாயகரின் அருளைப் பெறுமாறு கல்லூரி விழாக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.