தமிழகத்தில் அதிமுகவை விஜய் பின்னுக்குத் தள்ளுவார்: நம்பிக்கை தெரிவித்தார் பிரவீண் சக்கரவர்த்தி
Meiveli Media Team

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், அரசியல் விமர்சகருமான பிரவீண் சக்கரவர்த்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தவெகவுக்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் அவர் அளித்த பல்வேறு பேட்டிகளில், விஜய்யின் அரசியல் பயணம், தவெகவின் வளர்ச்சி, மக்கள் ஆதரவு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். தற்போது ஒரு ஊடகத்திற்கு அளித்த புதிய பேட்டியில், தவெகவின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் குறித்து மேலும் தெளிவான கருத்துகளை வெளியிட்டுள்ளார். பிரவீண் சக்கரவர்த்தி, ‘விஜய்க்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற பேச்சு இருக்கிறது; அக்கட்சியின் வளர்ச்சி ஊரறிந்த விஷயம்; மக்கள் விஜயை அங்கீகரித்துள்ளது என்னுடைய ஆய்வுகளிலேயே தெரிகிறது’ என்று தெரிவித்துள்ளார். தவெகவின் அடிப்படை ஆதரவு வலுவாக உள்ளது என்றும், விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கு தமிழகத்தில் பரவலாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.கருத்துக் கணிப்புகள் மற்றும் தரைமட்ட ஆய்வுகள் மூலம் தான் இதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.மேலும் பேசிய அவர், ‘தமிழகத்தில் தற்போது மூன்று பெரிய அரசியல் சக்திகள் உள்ளன. பாஜக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, தவெக தலைமையில் ஒரு அணி. இதில் மூன்றாவது அரசியல் சக்தி தவெகதான்’ என்று திட்டவட்டமாகக் கூறினார். தவெகவை மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக அங்கீகரித்து, விஜய்யை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டாலும் தவெக வலுவாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரவீண் சக்கரவர்த்தி, ‘தமிழகத்தில் அதிமுகவை விஜய் பின்னுக்குத் தள்ளுவார்; சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவைவிட தவெக அதிக வாக்குகள் பெறும்’ என்று கூறினார்.

