வாக்குமூலம் அளித்துவிட்டு ஷிரந்தி ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இன்று காலை குறித்த காரியாலயத்திற்கு வருகை தந்த அவரிடம், சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த விசாரணைகளின் போது பதிவு செய்யப்பட்ட நீண்ட வாக்குமூலத்தை அடுத்து, அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் அல்லது சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் விபரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் அவர் எவ்வித தடையுமின்றி அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.