விஜய் – சீமான் கைகோர்க்கலாம் என எதிர்பார்ப்பு: பரபரப்பாகும் தமிழக அரசியல்களம்
Meiveli Media Team

தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்ற நிலை நீடிக்கிறது. தி.மு.க. தனது கூட்டணியை கடந்த சட்டசபை தேர்தலில் இருந்ததுபோல வலுவாக வைத்துள்ளது.
தற்போது, கூடுதலாக நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்துள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில், பா.ம.க. -அன்புமணி அணி, த.மா.கா, அ.ம.மு.க, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன. தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சியை இணைப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில். த.வெ.க. தலைவர் விஜய், தனது நெருங்கிய திரைத்துறை நண்பர் ஒருவர் மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. நாம் இருவரும் தனித்தனியாக நின்றால், கணிசமான வாக்குகளைத்தான் பெற முடியும். தேர்தலில் வெற்றி வாகை சூட வேண்டும் என்றால், இருவரும் இணைந்த கைகளானால் மட்டுமே அது சாத்தியம்’ என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால், உடனே பதில் எதுவும் சொல்லாத சீமான், யோசிக்கத் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தலில் சீமானை தனித்து களம்காணச் சொல்லியே ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாம். தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,அது மும்முனை போட்டியாக குறைந்தால், அதாவது விஜய் – சீமான் கைகோர்த்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் சமயத்தில் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வகையில், தமிழக அரசியல் நகர்வுகள் தற்போது பரபரப்பாக இருந்து கொண்டிருக்கிறது.

