அனைவரும் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளார்கள்.கலாநிதி ஹரிணி அமரசூரிய
கொழும்பு மாவட்டத்தில் உள்ள தெமட்டகொட, கொட்டாஞ்சேனை, மருதானை மற்றும் கொம்பனியவீதி ஆகிய இடங்களில் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ரூபாவாகும். கொழும்பில் ஒரு வசதிபடைத்த நகரசபை உள்ளது. இந்த நகர சபையில் என்ன குறைவு? இந்தப் பகுதிகளை எவ்வளவு முன்னேற்ற முடியும்? மக்கள் பற்றிய எந்த உணர்வும் இல்லை. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய எந்த்த் தேவையும் இல்லை. நாம் இதைச் சொன்னாலும், நாம் எதுவும் செய்ய முடியாது. கொழும்பு மாநகர சபையைப் பற்றி நாம் நினைக்கும் போது, பொதுவாக ஒரு பெரும் திருட்டுக்கள் நிறைந்த இடம் பற்றித்தான் எமக்கு நினைவுக்கு வரும். நகர சபையைப் பற்றிய நமது பிம்பம் என்னவென்றால், அது பணத்தை வீணடிக்கிற, நம்மை இங்கும் அங்கும் அலையச் செய்கிற, எதையும் செய்து முடிக்க இயலாத ஒரு இடம். இந்த நிலை மாற வேண்டும். இந்த நாட்டை மாற்றும் பயணத்தை இந்த நாட்டு மக்கள் 2024 ஆம் ஆண்டு தொடங்கினர். இந்த நாட்டின் வரலாற்றை மாற்றியமைத்த இரண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல். அதன் மூலம், இப்போது அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் எம்மிடம் உள்ளது. உங்கள் அனைவரின் குரலையும், உங்கள் அனைவரின் தேவைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசாங்கம் எங்களிடம் உள்ளது.

உங்களுக்கு நினைவிருக்கலாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தேர்தல் 2023 இல் நடத்தப்படவிருந்தது. நாங்கள் கீழிருந்து ஆரம்பிக்கலாம் என்று சொன்னோம். ஆனால் தேசிய மக்கள் சக்தி கட்சி வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க என்ன செய்தார்? தேர்தலை இல்லாமல் செய்தார். வழக்கு தாக்கல் செய்தே இந்தத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி பெற்றது. வழக்குகள் மூலமே எங்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடிந்தது. அதனால்தான் இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் இரண்டு ஆண்டுகள் தாமதமாக வந்தாலும், அவற்றை நடத்தும் வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. 2024 இல் நீங்கள் தொடங்கிய வரலாற்றுப் பயணத்தை நாங்கள் நகர சபை வரை எடுத்துச் செல்வோம்.
எதிர்கட்கள் எங்களைப் பற்றி பல விடயங்களையும் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் திருடுகிறோம் என்று அவர்களால் சொல்ல முடியாது. நாங்கள் மக்களின் பணத்தைப் பாதுகாக்கிறோம். தோழர் அனுர குமார வெற்றி பெற்ற நாளிலிருந்து, ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம்.

இந்த முகங்களைப் பார்க்கும் போது நாம் என்ன சொல்ல முடியும்? மே 6 ஆம் திகதி கொழும்பு நகரை தேசிய மக்கள் சக்தி வெல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எமது சகோதரி விரோய் மேயராக தெரிவாவார். அதை மறுபடியும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த நகரத்தில் உங்களை நன்கு அறிந்த ஒரு மேயர் இப்போது உங்களிடம் இருக்கிறார், அவரை நீங்கள் அணுகி பேசலாம். அவர் திறமையான ஒரு குழுவுடன் மேயராகப் போகிறார். நாம் உண்மையிலேயே பெருமைப்படும் வகையில் இந்த நகரத்தை அபிவிருத்தி செய்து அழகுபடுத்த வேண்டும் என்ற மிகுந்த ஆசை அவருக்கு இருக்கிறது.
உங்கள் எல்லாருக்கும் கனவுகள் உள்ளதென்பது எனக்குத் தெரியும். இங்குள்ள இந்தப் பிள்ளைகள், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் கொண்டுள்ளனர். எமது கல்வி முறையை நாம் சரிசெய்ய வேண்டும். நாங்கள் முன்பள்ளியை நகர சபையிடம் ஒப்படைத்தது போலவே, நாட்டில் கல்வியை தேசிய அளவில் கட்டியெழுப்ப பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கான ஒரு பெரிய தேவை இருக்கிறது.

எல்லா பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்ல விரும்பும் வகையில் பாடசாலையை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். பிள்ளைகளுக்கு சுமையாக இல்லாத வகையில், பெற்றோருக்கு சுமையாக இல்லாத வகையில், பிள்ளைகள் விருப்பத்துடன் கற்கும் வகையில் கல்வி மாற்றப்பட வேண்டும். பாடசாலைக்குச் சென்று புத்தகங்களுக்குள் மட்டும் இருந்து பரீட்சைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படுவதை விட, கல்வியின் மூலம் உலகை எவ்வாறு திறந்து விரிவுபடுத்துவது என்பதை நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.


