தென் ஆப்பிரிக்காவை 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா.


நடப்பு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. நாணய சுழற்சயில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோஹித் , சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இவர்களின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது.

அதிலும் ரோஹித் வழக்கம் போல சிறப்பாக விளையாடினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ரோஹித் 40 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்களின் கூட்டணியில் 62 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. அடுத்து இந்திய அணியின் அதிரடி வீரர் கோலி களமிறங்கினார். மறுபுறம் விளையாடி வந்த சுப்மன் கில் நிதானமாக 23 ஓட்டங்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், கிங் கோலி இருவரும் தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் பந்து வீச்சாளர்கள் திணறினர். இதற்கிடையில் இருவரும் அரைசதம் விளாசினார். இருப்பினும் சிறப்பாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 87 பந்தில் 7 பவுண்டரி , 2 சிக்ஸர் என 77 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் வந்த வேகத்தில் 8 ஓட்டங்களில் வெளியேறினார்.

பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி விளாசி 22 ஓட்டங்களில் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கிடம் பிடி கொடுத்து நடையை கட்டினார். கடைசியில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா வந்த வேகத்தில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் என மொத்தம் 29 ஓட்டங்கள் குவித்தார். இதற்கிடையில் மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த கோலி சதம் விளாசினார்.

இந்த சதம் மூலம் ஒருநாள் போட்டியில் கோலி 49-வது சதத்தைப் பதிவு செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ஓட்டங்கள் குவித்தது. கடைசிவரை களத்தில் கோலி 101* ஓட்டங்களுடனும் , ஜடேஜா 29 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி 327 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக தேம்பா பாவுமா, குயிண்டன் டி காக் களமிறங்கினர். 2 ஓவரை முகமது சிராஜ் வீசிய போது அந்த ஓவரின் 4-வது பந்தில் நடப்பு உலககோப்பையில் 4 சதங்கள் விளாசி அதிரடி காட்டி வந்த தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் ஓட்டங்களை எடுக்காமல் டக் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்க மறுபுறம் விளையாடி வந்த தொடக்க வீரர் தேம்பா பாவுமா ஜடேஜா வீசிய முதல் ஓவரில் 11 ஓட்டங்கள் எடுத்து போல்ட் ஆனார். பின்னர் ஐடன் மார்க்ராம் வந்த வேகத்தில் ஷமி ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி விளாசி அடுத்த பந்திலே விக்கெட் கீப்பர் ராகுலிடம் பிடி கொடுத்து 9 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 11 பந்தில் வெறும் 1 ஓட்டம் எடுத்து ஜடேஜா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் களத்தில் விளையாடி வந்த ராஸ்ஸி வான் டெர் டு ஆட்டமிழனத்தார் . இதனால் தென்னாபிரிக்கா அணி 13 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 40 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்படி கேசவ் மகாராஜ் 7, டேவிட் மில்லர் 11, மார்கோ ஜான்சன் 14, ராபடா 6 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் தென்னாபிரிக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ஓட்டங்கள் எடுத்து 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டையும் ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டையும், சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இந்த வெற்றி மூலம் நடப்பு உலக்கோப்பையில் விளையாடிய 8 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.