உலகக்கோப்பை கிரிக்கெட் – 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

இந்தியா ,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே  உலகக்கோப்பையின் 5  வது லீக் போட்டி  சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சயில் வென்ற  ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்  மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மிட்செல் மார்ஷ் ஓட்டங்கள் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் உடன்  வார்னர் கை கோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரின் கூட்டணியில் 69 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது.

சிறப்பாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 41 எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க  நிதானமாக விளையாடிய ஸ்மித்  46 ஓட்டங்கள் ஜடேஜாவிடம் போல்ட் ஆனார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். மத்தியில் களம் கண்ட மிட்செல் ஸ்டார்க் மட்டும் 28  ஓட்டங்கள் எடுக்க இறுதியாக  ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 46 ஓட்டங்களும், வார்னர் 41 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணியில்  ஜடேஜா 3 விக்கெட்டையும் , குல்தீப் , பும்ரா தலா  2 விக்கெட்டையும் , முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 200  ஓட்டங்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின்  தொடக்க வீரர்களாக ரோஹித், இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரின் 4 பந்தில் இஷான் கிஷன் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் அடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்க 2-வது ஓவரின் 3 பந்தில் ரோஹித்தும், கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் இந்திய அணி 2 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டை கொடுத்தது. பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி கே.எல் ராகுல் இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

நிதானமாக விளையாடி இருவரும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடிய கோலி 116 பந்திற்கு  85 ஓட்டங்கள்எடுத்து விக்கெட்டை இழந்தார். இதில் 6 பவுண்டரி அடங்கும். இவர்கள் இருவர் கூட்டணியில் 165 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. இதைதொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினர். களத்தில் சிறப்பாக விளையாடிய  கே.எல். ராகுல் 115 பந்திற்கு 97  ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 2 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும் அதேபோல ஹர்திக் பாண்டியா 11 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக இந்திய அணி 41.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 201 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு உலகக்கோப்பின் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்டையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் பறித்தனர்.