ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ‘ஏ.டி.பி. பைனல்ஸ்’ எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது.

குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். இதில் முதல் அரையிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-5) , 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறி இருந்தார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதியில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி நார்வேயின் காஸ்பர் ரூட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்- காஸ்பர் ரூட் ஆகியோர் சாம்பியன் பட்டத்துக்கான பலப்பரீட்சை நடத்தினர். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதன்மூலம் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்திய ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றி அசத்தினார்.