பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்தது. 160 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர்.

ஆனால், ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ஓட்டங்கள் எடுத்திருந்த ராகுல் 1.5 ஓவரில் நசிம் ஷா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் . 4 ஓட்டங்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா 3.2 ஓவரில் ஹரிஸ் ரவுல்ப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் . அடுத்துவந்த சூர்யகுமார் 15 ஓட்டங்களில் வெளியேறினார் . பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 6.1 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து திணறியது.

பின்னர் பாண்டியா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 30 பந்துகளில் 60 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் கோலி, பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், பாகிஸ்தான் வீரர்களும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

19-வது ஓவரில் கோலி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 40 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா 19.1 ஓவரில் ஆட்டமிழந்தர் . அடுத்து தினேஷ் கார்த்திக் 19.5 ஓவரில் ஆட்டமிழந்தார் . இறுதியில் ஆட்டத்தின் கடைசி பந்தில் 1 ஓட்டம் தேவைப்பட்டது.

அப்போது, களத்தில் இருந்த அஸ்வின் 1 ஓட்டம் எடுத்தார். இதன் மூலம் வெற்றி இலக்கான 160 ஓட்டங்களை இந்தியா எட்டியது. இதன் மூலம் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. கோலி 82 ஓட்டங்களுடன் களத்தில் இருந்து வெற்றிக்க்கு வித்திட்டார்.