வன்னி மாவட்ட அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோர வேண்டும்: வவுனியா வடக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கொந்தளிப்பு
Meiveli Media Team

வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இன்லையேல் போராட்டத்தில் இறங்குவோம் எனவும் வவுனியா வடக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ல.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு கல்வி வலயம் தொடர்பாகவும் ஆசிரியர்களின் கற்பித்தல் தொடர்பாகவும் மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாகவும் வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்க சார்பான இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அவதூறுகளை பரப்பியுள்ளனர் இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. ஆசிரியர்கள் இவ் வலயத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் சேவையாற்றும் போது இவ் வலயத்தில் கற்பித்த பாராளுமன்ற உறுப்பினர் தனிப்பட்ட சொந்த விடயங்களுக்காக ஒட்டு மொத்த வலயத்தையும் பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அமைச்சரே இது அபிவிருத்திக் கூட்டம் அதை தனியே கதைப்போம் என்றார். ஆனால் தனிப்பட்ட விரோதம் காரணமாக அந்தக் கூட்டத்தில் ஒரு அதிகாரி கூறும் தரவுகளை கூட கேட்காமல் நிற்க வைத்து கேள்வி கேட்கும் இவர்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பொது வெளியில் பகிரப்படுவதுடன் இது தொடர்பாக மன்னிப்பு அறிக்கை விடாவிட்டால் எமது சங்கம் போராட்டத்தில் இறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

