ஜூலை 15 ஆம் திகதி முதல் வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்.


எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் ரயில் சேவையை ஆரம்பிக்க முடியும் என்று மஹவ – ஓமந்தை ரயில் வீதி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க தெரிவித்தார்.அநுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.குறித்த மார்க்கத்தின் திருத்தப் பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், அந்த மார்க்கத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ளதுடன், இரண்டாம் கட்டம் காலநிலையைக் கருத்தில்கொண்டு இடைநிறுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.மீண்டும் அடுத்த வருடம் முற்பகுதியில் குறித்த வீதியின் இரண்டாம் கட்டத் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்று மஹவ – ஓமந்தை ரயில் வீதி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் அசோக முனசிங்க மேலும் குறிப்பிட்டார்.வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு ரயில் சேவை கொழும்பு – கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.