தமிழகத்தில் நிகழ்ந்த விஷச்சாராய மரணங்களை கண்டித்து,  20-ஆம் தேதி பாஜக கண்டன போராட்டம்.

தமிழகத்தில் நிகழ்ந்த விஷச்சாராய மரணங்களை கண்டித்து, வருகிற 20-ஆம் தேதி பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த விஷச்சாராயம் மற்றும் கள்ளச்சாராய விற்பனையில் மொத்தம் 22 பேர் உயிரிழந்ததற்கு, எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும், அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்க திமுக அரசு தவறியிருப்பதாக விமர்சித்துள்ளார்.இதனால் திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் வரும் 20ஆம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்த கண்டன போராட்டத்தை பாஜகவின் மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள் என்றும், சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தான் பங்கேற்கவிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.