விழுப்புரம் மாவட்டதில் 18 பேர் பலி: விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்.

மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என காவல்துறை டி.ஜி.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியத்தில் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர்  உயிரிழந்துள்ளனர்.

அதே போல், சித்தாமூரிலும்  கள்ள சாராயம் அருந்தி 5 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம்இ சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதும் தெரியவந்தது. இந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் ஓதியூரைச் சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்ததில் அவர் முத்து என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும், முத்து பாண்டிச்சேரி ஏழுமலை என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.