5 நாள் மோதலுக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசா முனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. அதேவேளை மேற்குகரை பகுதி பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதனிடையே, பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் தலைவன் காதர் அதானென் (வயது 45) கடந்த 2-ம் தேதி இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தன்னை இஸ்ரேல் படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறிகடந்த 86 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த காதர் இஸ்ரேல் சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து, காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இதனை தொடர்ந்து காசாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவை குறிவைத்து கடந்த செவ்வாய்கிழமை முதல் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 90 பேர் படுகாயமடைந்தனர். இந்த சூழலில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் காசா முனையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் மூத்த தளபதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவின் ராக்கெட் தாக்குதல் பிரிவு தளபதியும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த மோதலுக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.