கூகுளில் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் ‘வட்டமான பர்வத விகாரை’ எனப் பெயர் மாற்றம்: தமிழர் கவலை.


வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்துக்கு ‘வட்டமான பர்வத விகாரை‘ எனக் கூகுளில் பெயர் மாற்றப்பட்டு புராதன பௌத்த ஆலயமாகக் காட்டப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தை அப் பகுதி மக்கள் பல் நெடுங்காலமாக வழிபடப்பட்டு வந்த நிலையில் தொல்பொருள் திணைக்களம் அது தமக்குரிய இடம் எனத் தெரிவித்து வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறை ஏற்படுத்தி வந்தனர்.

பொலிஸார் மற்றும் படைத்தரப்பின் ஆதரவுடன் வழிபாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்பாடுகளைத் தொல்பொருள் திணைக்களம் விதித்திருந்ததுடன், நெடுஙகேணி பொலிஸார் ஊடாக ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்திருந்தது.இவ்வாறு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸார், பாதுகாப்புத் தரப்பினரின் முழுமையான கண்காணிப்பில் இருந்த வெடுக்குநாறி மலையில் இருந்த ஆதி சிவன் விக்கிரகமும், அதனைச் சூழ இருந்த அம்மன், பிள்ளையார், வேல், சூளம் என்பனவும் இருந்த இடத்தில் இருந்து உடைத்து அகற்றப்பட்டு வழிபாட்டு ஆலயம் முழுமையாகச் சேதமாக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகக் கூகுளில் குறித்த ஆலயம் இருந்த வெடுக்குநாறிப் பகுதி ‘வட்டமான பர்வத விகாரை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புராதன பௌத்த ஆலயமாகக் காட்டப்பட்டுள்ளது.திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்பாடுகள் தொடர்பில் சைவ மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.