லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் தேசியக்கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்.

லண்டனிலுள்ள  இந்திய தூதரகத்தில் இந்தியாவின்  தேசியக்கொடி காலிஸ்தான் ஆதரவாளர்களால் அகற்றப்பட்டு காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்னால் திரண்ட  காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

அத்துடன்  லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான்  தேசியக்கொடியினை ஏற்றியுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாது இருந்தமையால்  அங்கு சென்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் அம்ரித்பாலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி தூதகரத்தில் கொடிக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த இந்திய தேசியக்கொடியை கீழே இறக்கி காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி இங்கிலாந்து வெளியுறவுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக்கொடியை இறக்கிய நிலையில் அங்கு சென்ற போலீசார் காலிஸ்தான் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தியதுடன்,  லண்டன் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடியை மிகப்பெரிய அளவில் மீண்டும் பறக்க விட்டுள்ளனர்.