மக்ரோன் அரசு மீது நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு.

Kumarathasan Karthigesu

பல கட்சிக் குழு ஒன்று மன்றில் முன்வைத்தது திங்களன்று வாக்கெடுப்பு?

எலிசபெத் போர்னின் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எந்தக் கட்சியின் சார்பிலும் இல்லாமல் பிரேரணைக்கு ஆதரவான பல கட்சி உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழு ஒன்றின் சார்பில் அந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் பேதங்களை மறந்து சகல கட்சிகளின் உறுப்பினர்களையும் வாக்களிக்க வைத்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை உத்தரவாதப்படுத்தும் நோக்குடனேயே ஒரு கட்சியின் பெயரில் அன்றிப் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு மூலம் “பல கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை” (tranpartisan motion of censure) முன்வைக்கப்பட்டிருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சிகளான இடதுசாரிக் கூட்டணியும் தீவிர வலதுசாரிக் கட்சியும் தமக்குள் பேதங்களை மறந்து இந்தப் பிரேரணைக்கு ஒருமித்து ஆதரவளிக்கவுள்ளன.

மரின் லூ பென் கட்சி உட்பட வேறு தரப்புகள் சார்பிலும் நம்பிக்கையில்லா பிரேரணைகளைச் சமர்ப்பிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருந்த போதிலும் மக்ரோனின் கட்சியின் அதிருப்தியாளர்களது ஆதரவையும் திரட்டும் நோக்குடனேயே அத்தகைய உறுப்பினர்களையும் உள்ளடக்கிய ஓர் குழுவின் சார்பில் பிரேரணையைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

நாட்டு மக்களால் எதிர்க்கப்படுகின்ற சர்ச்சைக்குரிய ஓய்வூதியத் திருத்தச்சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடாமலேயே அரசமைப்பின் விசேட அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமாக்கப்போவதாக பிரதமர் எலிசபெத் போர்ன் நேற்று அறிவித்திருந்தார்.மக்ரோன் அரசின் இந்தத் தீர்மானம் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

பிரான்ஸின் ஐந்தாவது குடியரசு அரசமைப்பின் ஒரு பிரிவில் அடங்குகின்ற 49.3 ஆவது ஷரத்து, சட்ட மூலம் ஒன்றை நாட்டு நலன் கருதி வாக்கெடுப்புக்கு விடாமலேயே சட்டமாக அறிவிப்பதற்குப் பிரதமருக்கு அதிகாரம் அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என அஞ்சி அவ்வாறு ஒரு சட்டப் பிரேரணையைச் சட்டமாக்க அரசு குறுக்கு வழியில் முயற்சிக்கின்ற சமயத்தில் அந்த அரசாங்கம் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை மன்றில் அறிவிப்பதற்கும் அதே அரசமைப்பு எதிர்க்கட்சிகளுக்கு இடமளிக்கிறது. அந்த விதிகளின் கீழேயே இன்று எலிசபெத் போர்னின் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளது நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அவ்வாறு பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டால் அதன் மீதான வாக்கெடுப்பை அடுத்த 48 மணிநேரத்துக்குப் பின்னரே மன்றில் நடத்த முடியும். எனவே இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்ற பிரேரணை மீது எதிர்வரும் திங்கட்கிழமையே வாக்களிப்பு இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

573 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றச் சட்ட சபையில் பிரேரணை வெற்றி பெறுவதற்கு ஆகக் குறைந்தது 287 உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

குழு ஒன்றின் சார்பில் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற “பல கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு”(multiparty no-confidence motion) 237 உறுப்பினர்களது ஆதரவு ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">