ஆசிய திரைப்பட விழாவில் ‘பொன்னியின் செல்வன்’.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இதன் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் குவித்து சாதனை நிகழ்த்தியது. இதில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இரண்டாம் பாகம் அடுத்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஹாங்காங்கில் இன்று (12-ந்தேதி) நடைபெற உள்ள 16-வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பொன்னியின் செல்வன் சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர்(தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்) சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) ஆகிய 6 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ஹாங்காங் சென்றுள்ளனர்.