அரசாங்கத்திற்கு தேர்தல் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சம்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித்.

நாட்டை அழித்து, மக்களின் வாழ்வை சீரழித்து மக்களை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் சென்ற முன்னாள் அரசாங்கத்திற்கும், தற்போதைய அரசாங்கத்திற்கும் தேர்தல் என்ற வார்த்தையை கேட்டாலே அச்சம் எழுந்துள்ளதாகவும், அவர்களால் மக்களிடம் செல்ல முடியாததாலையே அந்நிலை எனவும், இதன் காரணமாகவே யானை காக்கை மொட்டு தரப்புகள் மூன்றும் தேர்தலை ஒத்திவைக்கும் சதியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதுவரை 22 தடவைகளுக்கும் மேல் தேர்தலை சீர்குலைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணம் இல்லை என்று கூறுகின்றனர். என்றாலும் உயர் நீதிமன்றம் மக்கள் தரப்பில் பெரும் உத்தரவு பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வழங்க வேண்டுமென இடைக்காலத் தீர்ப்பு வழங்கினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக இந்த அரசாங்கம் தவறான வாதத்தை உருவாக்கி அதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சிறப்புரிமைக் குழுவுக்குக் அழைத்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பக்கச்சார்பற்ற நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரழின் ஒரு பகுதி செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சிறப்புரிமைக் குழுவின் பணிகள் முடியும் வரை இந்த சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர்களுக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரப்படுவதாகவும், எனவே வாக்குரிமைக்காக வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் செயற்படும் சர்வாதிகார அரசாங்கத்தை தோற்கடிக்க ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கட்டுவன பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.