சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்வு.

சீனாவின் அதிபராக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர். தேர்தலில் வேறு யாரும் போட்டியிடவில்லை என்று செய்தி வெளியாகி உள்ளது. மேலும் சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சீன நாடாளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை அதிபராக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபரில், ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் வெற்றிகளுடன், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் மாறி வருகிறார்.

இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற வரம்பை கடந்த 2018-ம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கினார். இதன் மூலம் அவர் ஓய்வு பெறும் வரை, அல்லது இறக்கும் வரை அவரே சீனாவை ஆட்சி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.