தண்ணீரை நஞ்சாக்கி ஆபத்தை உருவாக்கும் கழிப்பறைக் காகிதம்!

Kumarathasan Karthigesu

அதன் இரசாயனங்களால் புற்று நோய்க்கு வாய்ப்பு!!

மனித வாழ்க்கையில் அதிகம் உபயோகிக்கின்ற சில பொருள்கள் மூலம் சூழலில் பரவுகின்ற நச்சுக்கள் “என்றும் நிலைத்திருக்கின்ற இரசாயனங்கள்”(Forever chemicals” or PFAS) என்று அழைக்கப்படுகின்றன.

சில பொருள்களின் தயாரிப்பில் அனுமதிக்கப்படுகின்ற இந்த வகை இரசாயனங்கள் சூழலிலும் மனித உடலிலும் என்றும் நிலைத்து நிற்கக் கூடியவை. ஒட்டாத சமையல் பாத்திரங்கள் (non-stick cookware) அழகுசாதனப் பொருட்கள்(cosmetics) மற்றும் சில வகை ஆடைத் துணிகளில் கலந்துள்ள இந்தவகை இரசாயனங்கள் புற்றுநோய் வகைகள், இருதய நோய்கள், கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகள் போன்ற பல பாதிப்புகளுடன் தொடர்புடையவை.

உலகெங்கும் கழிவு நீரிலும் மண்ணிலும் இந்த செயற்கை இரசாயனப் பொருள்கள் பெருமளவில் கலந்துள்ளன. இவ்வாறு நிலைத்திருக்க கூடிய இரசாயனப் பதார்த்தங்களைச்(Forever chemicals” or PFAS)சுற்றுச் சூழலில் சேர்க்கின்ற மற்றொரு மனிதபாவனைப் பொருளை அறிவியலாளர்கள் அண்மையில் அடையாளம் கண்டுள்ளனர்.அதுதான் கழிப்பறைக் காகிதம் (toilet paper) . சுற்றுச் சூழல் அறிவியலாளர்கள் கழிவு நீர்ச் சுத்திகரிப்பு மையங்களில் பெறப்பட்ட நீரின் மாதிரிகளைச் சோதனை செய்துபார்த்ததில் அந்த நீரில் PFAS இரசாயனங்களின் செறிவைக் கழிப்பறைக் காகிதங்களே ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா. மேற்கு ஐரோப்பாப் பகுதிகளில் விற்பனையாகின்ற கழிப்பறைக் காகிதங்கள் பெறப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எடுக்கப்பட்ட நீரின் மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

மீள் சுழற்சிக்கு உட்படுத்தக் கூடிய கழிப்பறைக் காகிதங்கள் மரக்கூழை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு மரத்தை மரக் கூழாக மாற்றும் தொழில்நுட்ப முறைமையில்(converting wood into pulp) இந்த நிலைத்திருக்கக் கூடிய இரசாயனப் பொருள்கள் (PFAS)அதிகம் சேர்க்கப்படுகின்றன.அவை இறுதியில் கழிப்பறைக் காகிதத்துடன் தண்ணீரில் கலந்து நிலத்தையும் சூழலையும் சென்றடைகின்றது.

மனித குலத்துக்கு ஆபத்தான இந்தத் தகவலைச் “சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கடிதங்களுக்கான இதழ் “(Environmental Science and Technology Letters journal) என்னும் சஞ்சிகை கடந்த புதனன்று வெளியிட்டுள்ளது.

உலகெங்கும் சேகரிக்கப்படும் கழிவு நீர் விவசாய நடவடிக்கைகளுக்கும் நிலப் பயன்பாட்டிற்கும் உபயோகிக்கப்படுகின்றது. அதன் மூலம் ஆபத்தான இரசாயனங்கள் நிலத்தில் கலந்து குடி தண்ணீர் நிலைகளையும் சென்றடைகின்றது.

எனவே கழிவு நீரில் PFAS இரசாயனங்களைக் குறைப்பது மிக மிக முக்கியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">