பதவி விலகினார் மயந்த திஸாநாயக்க!

ஆர்.சனத்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க இன்று அறிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னரே மயந்த இந்த முடிவை எடுத்துள்ளார்.அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. எனினும், அரச தரப்பின் ஆதரவுடன் அப்பதவிக்கு மயந்த திஸாநாயக்க தெரிவாகியிருந்தார்.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணிகள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. மயந்த திஸாநாயக்க பதவி விலக வேண்டும் எனவும் வலிறுத்தின. இதற்கு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்திருந்தாலும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பதவி விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார்.