காதலிக்கு மெசேஜ் அனுப்பியதால் நண்பனின் தலை துண்டித்து, இதயத்தை வெளியே எடுத்த இளைஞன்.

காதல் விவகாரத்தில் நண்பனின் தலையை துண்டித்து, அந்தரங்க உறுப்பை துண்டித்து, உடலில் இருந்து இதயத்தை வெளியே எடுத்த இளைஞர் போலீசில் சரணடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவர் நவீன் (வயது 22). இவரும் அதே கல்லூரில் அதே வகுப்பில் பயின்றுவந்த ஹரி ஹர கிருஷ்ணா (வயது 21) என்ற மாணவனும் நண்பர்கள். இதனிடையே, அதே கல்லூரியில் படிக்கும் மாணவியை நவீன் அவரது நண்பன் கிருஷ்ணா என இருவருக்கும் காதலித்து வந்துள்ளனர். முதலில் நவீன் தனது காதலை அந்த மாணவியிடம் கூறியுள்ளார். அந்த மாணவியும் நவீனின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, பிரச்சினை காரணமாக நவீனும் அவரது காதலியான மாணவியும் பிரிந்துள்ளனர்.

இதன் பின்னர் வெகுநாட்கள் கழித்து ஹரிஹர கிருஷ்ணா அந்த மாணவியுடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். நவீனின் காதலை விட்டு பிரிந்து பல மாதங்கள் ஆனதையடுத்து, ஹரிஹர கிருஷ்ணனின் காதலுக்கு அந்த மாணவி சம்மதம் தெரிவித்துள்ளார். ஹரிஹர கிருஷ்ணனும் அந்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

 பிரிந்து சென்றபோதும் தனது முன்னாள் காதலியான மாணவிக்கு நவீன் தொடர்ந்து செல்போனின் கால் செய்தும், மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன்னை விட்டு பிரிந்தபோதும் நவீன் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவருவது குறித்து அந்த மாணவி தனது காதலனான ஹரிஹர கிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹர கிருஷ்ணன் தனது காதலிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்த தனது நண்பன் நவீனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக கடந்த 3 மாதங்கள் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு தனது நண்பன் நவீனை தில்ஷுக்நகரில் உள்ள தனது வீட்டிற்கு ஹரிஹர கிருஷ்ணன் அழைத்து சென்றுள்ளார். பின்னர், இரவு கல்லூரி விடுதியில் விட்டுவிடுவதாக ஹரிஹர கிருஷ்ணன் தனது பைக்கில் நவீனை அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் பேடா அமெர்பெட் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு நவீனை அழைத்து சென்றார். அங்கு நவீனும் ஹரிஹர கிருஷ்ணனும் மது குடித்துள்ளனர்.

மது போதையில் காதலி விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹரிஹர கிருஷ்ணன் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை கொண்டு நவீனை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். நவீனின் தலையை துண்டித்து, உடலை இரண்டாக வெட்டி இதயத்தை வெளியே எடுத்துள்ளார். மேலும், நவீனின் விரல்களையும் துண்டித்துள்ளார். ஆயினும் ஆத்திரமடங்காத ஹரிஹர கிருஷ்ணன் தனது நண்பன் நவீனின் பிறப்புறுப்பையும் துண்டித்துள்ளார். நவீனை கொடூரமாக கொலை செய்த ஹரிஹர கிருஷ்ணன் அந்த கொடூரத்தை புகைப்படம் எடுத்து தனது காதலிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டு சென்றார். இந்த கொலை நடந்து 9 நாட்கள் ஆன நிலையில் ஹரிஹர கிருஷ்ணன் நேற்று போலீசில் சரணடைந்தார். இதையடுத்து, ஹரிஹர கிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர், கொடூர கொலை செய்யப்பட்ட நவீனின் உடலை மீட்ட போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காதலிக்கு போன் செய்து தொல்லை கொடுத்ததால் நண்பனை கொடூரமாக கொலை செய்து இதயத்தை வெளியே எடுத்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.