கொழும்பு நகரை பாதிக்கக்கூடிய நிலநடுக்கம் தொடர்பில் எச்சரிக்கை.

இந்தியாவில் மிகப்பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடபகுதியில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அவ்வாறான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கையில் கொழும்பிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வடக்கே ஏற்பட்ட 5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் கொழும்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்தியாவில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.