இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்யும் கோரிக்கைக்கு பீற்றர் டவுட் எம்பி ஆதரவு!

பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்க கோரி தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள்.

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஉள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ்(Global Human Rights Sanction Regime) தடைசெய்ய வேண்டுமென்ற பிரித்தானிய வாழ் தமிழர்களின் கோரிக்கைக்கு, பிரித்தானிய திறைசேரியின் முன்னாள் நிழல் செயலரும், லீவர்பூல் பூற்றில் ( Liverpool Bootle) பகுதி பாராளுமன்ற உறுப்பினருமாகிய மதிப்பிற்குரிய பீற்றர் டவுட்( Peter Dowd MP) அவர்கள் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

இன்று(23/02/2023) மதியம் 02 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பின் முடிவிலேயே அவர் தனது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

சட்ட ஆலோசகரும்மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ICPPG அமைப்பின் சார்பில் மனித உரிமை செயற்பாட்டாளர்களான திருமதி கிறிஸ்ரி நிலானி காண்டீபன் மற்றும் திரு றோய் ஐக்க்ஷான் யேசுதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான அபிந்தன் சுப்பிரமணியம், சயூபன் சிவகுரு, நிலக்ஐன் சிவலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது உரையின் போது, இலங்கையின் ஆரம்பகால வரலாறு பற்றி எடுத்துரைத்தார். இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ்மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு(FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார். மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா,கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா,கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.தனது தொகுப்புரையின் போது, மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPGT) மற்றும் மக்னெட் ஸ்கை (Magnitsky) தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு என்பவற்றில் இணைந்து கொள்ளுமாறும், இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை இதுவரை தடைசெய்யாமைக்கு பிரித்தானி வெளிவிவகார அமைச்சிடம் (FCDO) விளக்கம் கோரி கடிதம் எழுதுமாறும், பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து, அவருடைய கட்டளையின் கீழ் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதைப் பற்றி அவர்கள் கூறுவதைக் கேட்குமாறும் மீண்டும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பிரச்சாரத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடியோ பிரச்சாரத்தில் சேரும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

அனைத்து கருத்துக்களையும் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி அழுத்தம் கொடுப்பதாக கூறினார்.