எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாளை யாழ்ப்பாணம் விஜயம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சி தலைவர் நாளைய தினம் காலை 08.30 மணியளவில் நல்ல ஆதீன குரு முதல்வரை சந்தித்த பின்னர்  தொடர்ந்து, யாழ்.மறைமாவட்ட ஆயரை சந்திக்கவுள்ளார். அங்கிருந்து அனலைதீவு ஐயனார் கோவிலிற்கு காலை 10 மணியளவில் சென்று வழிபாட்டு தொடர்ந்து கூட்டம் ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.

அதனை அடுத்து மாலை சண்டிலிப்பாய் கொம்பனிப்புலம் பிள்ளையார் கோவிலடி,  வட்டுக்கோட்டை மூளாய் பிள்ளையார் கோவிலடி, அளவெட்டி கும்பலை பாரதி விளையாட்டுக்கழகம், யாழ்ப்பாணம் றக்கா வீதி இளங்கதிர் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவுள்ளார்.  மறுநாள் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண நாக விகாரைக்கு சென்று வழிபட்டு , விகாரதிபதியை சந்திக்கவுள்ளார்.

அதனை அடுத்து நாவலர் வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்லும் எதிர்க்கட்சி தலைவர் முஸ்லீம் மத தலைவர்களை சந்திக்கவுள்ளார். அங்கிருந்து கிளிநொச்சிக்கு செல்லும் எதிர்க்கட்சி தலைவர் காலை 09.30 மணியளவில் பூநகரி நாச்சிக்குடா பகுதியில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டு அங்கிருந்து கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.