அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்: ரஷ்யா விலகியது!

Kumarathasan Karthigesu

புடினின்”பூகம்ப” அறிவிப்பு இரு பெரும் வல்லரசுகளும் பனிப் போர் மனநிலையில்!!

“நியூ ஸ்ரார்ட்” (New START) என்று அழைக்கப்படுகின்ற அணு ஆயுதக் குறைப்பு (nuclear disarmament) உடன்படிக்கையில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக மொஸ்கோ அறிவித்திருக்கிறது.

அமெரிக்கா புதிதாக அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தினால் ரஷ்யாவும் அதனைச் செய்யும் என்று  அதிபர் புடின் எச்சரித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரு பெரும் வல்லரசுகளும் தங்கள் அணு ஆயுதங்களைக் குறைப்பதையும் ஒருவரது அணு ஆயுத வசதிகளை அடுத்தவர் பரஸ்பரம் பரிசோதித்து அறிந்து கொள்வதையும் இந்த உடன்பாடு அனுமதித்திருந்தது.

ரஷ்ய அதிபர் புடின் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையில் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளில் இந்த உடன்படிக்கை விவகாரமும் ஒன்றாகும் .அவரது அறிவிப்பை அடுத்து உலகில் அணு ஆயுதப் போட்டியைத் தவிர்க்கின்ற முக்கியமான அந்த இணக்கப்பாடு தற்காலிகமாகச் செயலிழக்கிறது.

அணு ஆயுதக் குறைப்புத் தொடர்பான முதல் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே 1972 இல் மொஸ்கோவில் கையெழுத்தானது மொஸ்கோவும் வாஷிங்டனும் மூலோபாய அணு ஆயுதக் குறைப்புத் தொடர்பாக செய்திருந்த ஆகப் பிந்திய உடன்படிக்கையே நியூ ஸ்ரார்ட் (New START) என்று அழைக்கப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்யத் துணை அதிபர் திமிட்ரி மெட்வெடேவும் (Dmitry Medvedev) செக் குடியரசின் (Czech Republic) தலைநகர் ப்ராக்கில் (Prague) இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

கிரெம்ளினுடன் உறவுகளை மீளப் புதுப்பிக்கின்ற “ரீ செற்” கொள்கையின் (Reset policy) கீழ் அமெரிக்க நிர்வாகம் மொஸ்கோவுடன் இந்த உடன்பாட்டை எட்டியிருந்தது. 2026 ஆம் ஆண்டு வரை உடன்படிக்கை அமுலில் இருக்கும்.

நியூ ஸ்ரார்ட் உடன்படிக்கை பனிப் போர்க் கால பரம வைரிகளாகிய இரு நாடுகளும் தங்களது வசம் நிலை நிறுத்தி வைத்திருக்கக் கூடிய அணு ஆயுதங்களது (deployed warheads) எண்ணிக்கையை ஆகக் குறைந்தது ஆயிரத்து 550 ஆக வரையறை செய்தது. அதற்கு முன்னர் 2002 இல் செய்யப்பட்ட வரையறையை விட இது முப்பது சதவீதம் அதிகம் ஆகும். அத்துடன் அணு ஏவுகணைகள், அணு குண்டுகள் போன்றவற்றின் எண்ணிக்கையையும் இந்த உடன்பாடு 800 ஆகக் குறைத்திருந்தது.

அதேசமயம் ஒரு நாடு அடுத்த நாட்டின் தளங்களுக்குள் சென்று அணு ஆயுதங்களது எண்ணிக்கை விவரங்களைப் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிப்பது இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சமாக இருந்தது.

அவ்வாறு எட்டப்பட்டு நடைமுறையில் இருந்துவந்த நம்பிக்கை தரும் உடன்படிக்கையில் இருந்தே ரஷ்யா தன்னைத் தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது.

அமெரிக்க அறிவியலாளர்களது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற (FAS) டேன் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் புடினின் அறிவிப்பை “பூகம்பம்” என்று வர்ணித்துள்ளார். 1970 ஆம் ஆண்டின் நிலைமைக்கு – அதாவது உலகின் இரு பெரும் அணு வல்லரசுகளினதும் அணு ஆயுத களஞ்சியங்கள் எந்த வித கட்டுப்பாடுகளோ – பரிசோதனைகளோ இல்லாத நிலைமைக்கு விடப்படுகின்ற “ஆபத்தான” தருணம் இது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

உடன்படிக்கையில் இருந்து மொஸ்கோ விலகுவது, ரஷ்யா அதன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துகின்ற ஆபத்தை “அதிகரிக்காது” . ஆனால் இந்த உடன்படிக்கையின் தோல்வி இரு நாடுகளையும் பனிப் போர்க் கால மனநிலைக்குத்(Cold War mentality) திரும்பச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் மேலும் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தவும் மற்றும் புதிய வகை ஆயுதங்களை உருவாக்கவும் இது வாய்ப்பு வழங்கும் என்று அர்த்தம். -இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன் மற்றும் சோவியத் தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவ் ஆகியோர் 1972 இல் முதல் அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது எடுக்கப்பட்ட படம்.

இன்று உலகில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஒன்பது நாடுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பெரியவை. சில மதிப்பீடுகளின்படி படி தற்சமயம் உலகில் உள்ள 13 ஆயிரம் போர் அணு ஆயுதங்களில் (nuclear warheads) 12 ஆயிரத்தை இவ்விரு நாடுகளுமே தம்வசம் வைத்திருக்கின்றன.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">