தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம் – முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21-ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பில் நடைபெற்ற, பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!.. தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!” என்று பதிவிட்டுள்ளார்.