நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் போராட்டம் தொடரும்-ரஞ்சித் மத்தும பண்டார.

நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றைய தினம்

போராட்டத்தை திட்டமிட்டவாறு முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உள்ளிட்ட பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மற்றும் பலர் மீது கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை குறித்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான  ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டங்களை தடைசெய்யும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தடை உத்தரவு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை கைவிடுமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை எனவும், தடை உத்தரவு எதையும் தாங்கள் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, திட்டமிட்டவாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.