அதானி குழுமத்தின் மற்றொரு முறைகேட்டை போர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக போர்ப்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்கள் வினோத் அதானி மேற்பார்வையில் இயங்கி வருகின்றன. துபாய், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து அதானி குழுமத்துடன் தொடர்புடைய பிற நிறுவனங்களின் சர்வதேச வணிகத்தை வினோத் அதானி கவனித்து வருகிறார்.

இந்தியாவில் தங்கி வணிகம் செய்யாத பணக்கார இந்தியர்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் வினோத் அதானி உள்ளார். வினோத் அதானியின் மறைமுக கட்டுப்பாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த வணிகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான ‘பினாக்கிள்’ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த விடிபி வங்கியில் வினோத் அதானி கடன் பெற்றுள்ளார்.

இந்தக் கடன் உக்ரைன் – ரஷியா போரின்போது 2021 ஏப்ரலில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ‘பினாக்கிள்’ நிறுவனம் கடனாகப் பெற்ற 263 மில்லியன் டாலர்களில் 258 மில்லியன் டாலர்களை பெயரிடப்படாத பங்குகளுக்காக ஒதுக்கியுள்ளதாக போர்ப்ஸ் அறிக்கை வாயிலாக குற்றம் சாட்டியுள்ளது.

ரஷிய வங்கியிருலிருந்து பெற்ற கடன் தொகைக்கான உத்தரவாதமாக ஆப்ரோ ஏசியா மற்றும் வேர்ல்ட்வைட் ஆகிய இரு நிறுவனங்களை பினாக்கிள் குறிப்பிட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்குச் சொந்தமானது என்று போர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.