புதுக்கோட்டையில் கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி.

புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 10 அடி உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே நகராட்சி சார்பில் ரூ.9¼ கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 10 அடி உயரத்தில் பேனா சிலை வடிவத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை சுற்றி நீரூற்று போன்றும், வட்ட வடிவில் நீரில் மீன்கள் காணப்படும் வகையில் அதன் மேல் சிறிய பாலம் போன்று அமைத்து பேனா அருகே மக்கள் சென்று பார்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த பேனா சின்னம் குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘புதுக்கோட்டை நகராட்சி பூங்காவில் பேனா ஒரு அடையாள சின்னமாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் இந்த பேனா சின்னம் வைப்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது’ என்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவு சின்னமாக சென்னையில் கடலில் பேனா நினைவுச் சின்னம் வைக்க திட்டமிட்டு அதற்கு ஆதரவும்,  எதிர்ப்பு இருந்து வருகிற நிலையில், தற்போது புதுக்கோட்டையில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.